மே, 2006 க்கான தொகுப்பு

மெய் தேடல்!

மே 29, 2006



நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில்

நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்

மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்


நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்

நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்

நித்திரையை தேடினேன் நீயில்லாமல்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடங்களில்

திக்கெட்டு திசையும் தேடினேன்

தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!

மீண்டும் துவங்கியது தேடல்

என்னுள்ளே எதையோ தேடினேன்

எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!

பார்க்க…ரசிக்க

மே 28, 2006

சூப்பர் ஸ்டார் தொண்டர் செல்வன் அவர்களுக்காக இந்த படங்கள்,பார்க்க…ரசிக்க




காத்திருத்தலே தொழிலாய்….

மே 28, 2006




உயிர் பிரிந்த பின்னும்

சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!

உதிர்ந்த பின்னும்

மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல !

கனவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!

காற்றில் வரைந்த ஓவியத்தை

கண்களில் சுமந்து நின்றேன்!

ஓவியம் உயிராகி வருமென

காத்திருந்தேன்…

காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !

சிப்பிக்குள் முத்து!

மே 24, 2006



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

விடியலை நோக்கி

மே 24, 2006



இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்

இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?

யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்

சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!

உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என

இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!

மே 24, 2006



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

போய் வா தென்றலே…

மே 24, 2006



போய் வா தென்றலே…

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!

எதையும் நினைக்கவில்லை…

மே 20, 2006



பிரிவென்று நினைக்கவில்லை பிரிந்த பின்னும்

வலி என்று நினைக்கவில்லை வலித்த பின்னும்

வாழ்க்கை என்று நினைக்கவில்லை தொலைத்த பின்னும்

உண்மை என்று நினைக்கவில்லை உதறிய பின்னும்

உயிர் என்று நினைக்கவில்லை இழந்த பின்னும்.

உறக்கம் என்று நினைக்கவில்லை உறங்கிய பின்னும்

விடியல் என்று நினைக்கவில்லை விடிந்த பின்னும்

மலர் என்று நினைக்கவில்லை மலர்ந்த பின்னும்

மனம் என்று நினைக்கவில்லை உடைந்த பின்னும்

தாகம் என்று நினைக்கவில்லை தவித்த பின்னும்

தீ என்று நினைக்கவில்லை தீண்டிய பின்னும்

தேவை என்று நினைக்கவில்லை இதயம் தொலைந்த பின்னும்

தேடல் என்று நினைக்கவில்லை தேடியலைந்த பின்னும்

எதையும் நினைக்கவில்லை என்னையே மறந்த பின்பு!

என்னவானேன் நான்…

மே 18, 2006

நீ பிரிந்த தருணம் முதல்…

கண்ணீர் இல்லா கண்கள் ஆனேன்

தண்ணீர் இல்லா தடாகம் ஆனேன்

உணர்வு இல்லா உருவம் ஆனேன்

வேர் இல்லா மரம் ஆனேன்

வேகம் இல்லா காற்று ஆனேன்

தோகை இல்லா மயில் ஆனேன்

தூக்கம் இல்லா துயரம் ஆனேன்

ராகம் இல்லா பாடல் ஆனேன்

மேகம் இல்லா வானம் ஆனேன்

நிலவு இல்லா இரவு ஆனேன்

நிச்சயமில்லா கனவு ஆனேன்

இத்தனையும் ஆன பின்னும்

இறவாது இருக்கின்றேன் மண்மீது

மீண்டும் சந்திப்போம் என்றாவது என்று!

பின்னூட்டம் குறித்தான வலைப்பதிவரின் மனோ நிலை!

மே 14, 2006

தருமி என்பவரின் வலைப்பதிவில் “நாமும் தமிழும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன்,சரி பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின, இவர் எதற்காக யார்ப் படிப்பதற்காக வலைப்பதிவு போடுகிறார்? இவரது கருத்துகள் அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்தது என்று மறு மொழி இட இத்தனை கட்டுப்பாடுகள்.எல்லாரும் பின்னூட்டம் இட அனுமதித்தால் ஆபாசமாக திட்டி சிலர் இடுகிறார்கள் அதை தவிர்க்க என்றால்.அதற்கு தானே கமெண்ட்ஸ் மாடரேஷன் உள்ளதே. அதனையும் மீறி ஆபாச பின்னூட்டம் வர வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதனை எளிதில் நீக்க முடியுமே.எனக்கு எதற்கு வீண் வேலை நான் இப்படி தான் செய்வேன் என்றால் அத்தனை பயம் இருப்பவர் ஏன் இங்கே வந்து அவர் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.பேசாமல் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பாக பக்கத்து வீட்டுக்காரர் உடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாமே!

தருமி இப்போது வேண்டுமானால் நான்கு பேருக்கு நன்கு தெரிந்தவராக இருந்து தேடி வந்து சிலர் பின்னுட்டம் இட்டு செல்லலாம். இவரின் துவக்க காலத்தில் ஒரு பின்னூட்டமாவது வராதா என்று காத்திருந்தவராக தான் இருக்க வேண்டும்.

இதனை தருமி என்ற தனி நபரை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை.இங்கே வலைப்பதிவு செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மனோ நிலையை ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டே சொல்கிறேன்.சரி நீ ஏன் அவசியம் பின்னூட்டம் இட்டு தான் ஆக வேண்டுமா. அப்படி மறு மொழி கூறி தான் ஆக வேண்டுமெனில் நீ தைரியமாக மின்னஞ்சல் முகவரி தர வேண்டியது தானே என்று கேட்கலாம்.ஒரு வலைப்பதிவைப் படித்து அதை எழுதியவர்க்கு மறு மொழி சொல்வது ஒரு ஊக்கம் அளிக்கும் சேவை.அதனை செய்ய முன் வருபவர்க்கு ஏன் கட்டுப்பாடுகள் என்பது தான் என் வினா? மின்னஞ்சல் முகவரி தர முடியவில்லை என்றால் வேறு வேலைப் பார்த்து கொண்டு போகலாமே என்றும் கேட்கலாம்.எல்லோர்ப் பார்வையிலும் படும் வண்ணம் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டியில் வெளியிட்டப் பின் மாற்று கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.அது பாரப்பட்சம் இன்றி அளிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு வலைப்பதிவு துவக்க வங்கி கணக்கு எண் தர வேண்டும் என்று சொன்னால் எத்தனை பேர் முன் வருவார்கள்.இலவசம் என்பதால் தானே ஆள் ஆளுக்கு வந்து கருத்து கந்தசாமிகளாய் மாறி தங்கள் வெந்ததும் வேகாததுமான கருத்துகளை அள்ளி இறைக்கிறார்கள்.இல்லை எல்லா வலைப்பதிவும் ஒரு தேர்வு குழு பரிசீலித்து அதன் பின்னரே வெளியிடப்படும் என்றால் எத்தனை தேறும்? இணையத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல வாய்ப்பளிக்க தான் இலவசமாய் பிளாக்குகள் உள்ளது.அப்புறம் என்ன தனியே ஒரு கருத்து சொல்வதில் பாகுபாடு!

பின்னூட்டமாக சொல்ல நினைத்ததை இங்கே நானே ஒரு வலைப்பதிவாக வெளியிட்டுள்ளேன்.இது எந்த தனி நபரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது அல்ல.முதலில் தங்கள் எழுத்துகளை யாரேனும் படித்தால் போதும் என்று இருந்து காலப்போக்கில் வலைப்பதிவு வெளியிடுவோரிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றத்தை சுட்டிக் காட்டவே.எனது வலைப்பதிவில் மறுமொழியிட எந்த வகைக் கட்டுபாடும் விதிக்கவில்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்!

வணக்கம் தருமி!

//1. அங்கலாய்த்தல் – இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)//

கலாய்த்தல் என்று சொல்வது நடைமுறையில் இருந்தாலும் .. சரியான சொற்பதம் கலாசுதல் தான்.இது ஒரு தூய தமிழ்ச்சொல்.சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அகராதில் உள்ளது.

“கலாசுதல் என்றால் உரக்க சத்தமிட்டு பேசுவது ,பெரும்பாலும் பொருள் அற்ற பேச்சு என்று போட்டுளார்கள். மிகவும் பொருத்தமான வார்த்தை தான்.சென்னையில் பெரும்பாலும் சாதாரண வாய் சண்டைக்கு கூட “போடாங்கோ டுபுக்கு தட்டுனா தாரந்துருவ… எங்க ஏரியா பக்கம் வந்துருவியா நீ மவனே செத்த” என்று “ஓவரா சவுண்டு” வேறு விடுவாங்க அதை நம்ம கைல ராங்க் காட்டினான் நல்ல கலாசிடேன்னு பெருமையா சொல்லிப்பாங்க! இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்திற்காக தேடி எடுத்தேன்.தற்போது தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. நம்ம ஆராய்ச்சிய வெளிக்காட்டிக்க ஒரு வாய்ப்பா போச்சு (எப்படி நம்ம வெட்டி ஆராய்ச்சி!??)